உத்தரபிரதேசத்தில் ஊர்க்காவல் படையினரால் நடத்தப்பட்ட திரங்கா மார்ச் இருசக்கர வாகன பேரணியின் நிறைவு விழாவில் அம்மாநில முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டு பேசியது:-
வளமான மற்றும் பாதுகாப்பான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு குடிமகனின் தனிப்பட்ட முயற்சி என்பது முக்கியம். ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கையை விட சமூகம் முக்கியம் என்ற உணர்வுடன் நாம் அனைவரும் பணியாற்றும்போது, இந்தியா உலகின் மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கும். ஒவ்வொரு குடிமகனுக்கும் நாட்டின் மீது பொறுப்பு இருக்கிறது. நம்முடைய இருப்பிடமும் நமது அடையாளமும் நம் நாட்டினால் தான். நமது நாடு பாதுகாப்பாக இருந்தால் மட்டும்தான் நாம் அனைவரும் பாதுகாப்பாக இருக்க முடியும்.
கொரோனா காலங்களில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டது. அவரது தலைமையில் கீழ் சுகாதார துறை பணியாளர்கள், நிர்வாகம், காவல்துறை மற்றும் ஊர்க்காவல்படையினர் தங்கள் பணியினை சிறப்பாக செய்து சரியான முன்னுதாரணமாகத் திகழ்ந்தனர். பிரதமர் அடுத்த 25 வருடங்களுக்கு ஒரு ‘அமிர்த காலத்தை’ நம் முன் வைத்துள்ளார். வளமான மற்றும் பாதுகாப்பான இந்தியாவுக்கு, ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தனது பொறுப்புகளை நேர்மையுடன் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.