மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக சென்னை மெரினா கடலில் 38 கோடி ரூபாய் செலவில் பேனா நினைவுச் சின்னம் வைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்ட நாள் முதல் அது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
பல அரசியல் கட்சி தலைவர்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். மேலும் அப்படி நினைவுச்சின்னம் வைக்க வேண்டும் என்றால் தங்களுடைய சொந்த பணத்தில் வைக்க வேண்டியது தானே? எதற்காக மக்கள் வரிப்பணத்தில் வைக்கிறீர்கள்? என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அந்த வகையில், சென்னையில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மீனவர் வாழ்வாதாரத்தை அழித்து நினைவு சின்னம் தேவையா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் மீனவர் வாழ்வாதாரத்தை அழித்து கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதை அதிமுக எப்போதும் அனுமதிக்காது. அறிவாலயத்தில் பத்தாயிரம் அடி கூட சிலை வைத்துக் கொள்ளுங்கள் அதை உங்களுடைய பணத்தில் அமைத்துக் கொள்ளுங்கள். மீன் குஞ்சுகள் இனப்பெருக்கம் செய்யும் முகதுவாரத்தில் பேனா நினைவு சின்னம் அமைப்பது அவசியம் தானா? என்று மிகக் காட்டமாக கேள்வி எழுப்பி இருக்கிறார்.
அத்துடன் திமுக மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்துள்ளார்கள். ஆகவே தான் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக போட்டியிடவில்லை நாங்கள் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தாலும், தைரியமாக தேர்தலில் போட்டியிடுகின்றோம். திமுக காங்கிரஸ் கட்சியை நிறுத்துகிறது. உங்களுக்கு தைரியம் இருந்தால் நீங்களே நேரடியாக நிற்க வேண்டியது தானே? திமுக ஆட்சியில் தமிழகத்தில் விலைவாசி உயர்வு பல மடங்கு அதிகரித்து இருக்கிறது என்று தெரிவித்துள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
திமுக அரசு 85 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக பொய் கூறி வருகிறது. தேர்தல் விதிமுறை நடைமுறையில் இருக்கின்ற நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் இரவில் சாலை போடுவது எதற்காக? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். விவசாய கடன், நகை கடன் போன்றவற்றை தள்ளுபடி செய்யவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். மேலும் தேர்தல் என்று வந்துவிட்டாலே டிடிவி தினகரனுக்கு பயம் ஏற்பட்டு விடுகிறது என்று ஜெயக்குமார் விமர்சனம் செய்திருக்கிறார்.