கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே இருக்கும் ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில், 10-ஆம் வகுப்பு சமூக அறிவியல் ஆசிரியராக ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இவர் அடுத்த மாதம் ஓய்வு பெற இருக்கிறார். இந்த நிலையில், பள்ளியில் படித்து வரும் மாணவர்களிடம் வகுப்புஎடுக்கும் போது, இது தான் காதலிக்கும் வயது. இந்த வயதில் காதலிக்காமல் எந்த வயதில் காதலிப்பது என்றும், அதுபோல் சக மாணவிகளுக்கு, மாணவர்களை லவ் லெட்டர் கொடுக்க சொல்லி கூறியுள்ளார். மேலும் பள்ளியில் படிக்கும் மாணவிகள் நடந்து செல்லும்போது, அவர்களை பற்றி ஆபாசமாக மாணவர்களிடம் கூறுவதை வாடிக்கையாக வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர் அவரது தந்தையிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஞானசேகரன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்களிடம் புகார் அளித்தார். அதன்பேரில் இன்று காலை பள்ளிக்கு சென்ற பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மற்றும் 20-க்கும் மேற்பட்டோர் 10-ஆம் வகுப்பு மாணவர்களை ஒவ்வொருவராக அழைத்து குறிப்பிட்ட ஆசிரியர் முன்பு விசாரித்தனர். அந்த ஆசிரியர் நடந்துகொண்ட விதம் உண்மை என்று தெரிந்ததை தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு புகார் அளிக்கக்கூறி தலைமை ஆசிரியரிடம் ஊர் மக்கள் கூறினர்.
இந்த விவகாரம் பெரிதாவதை அறிந்த அந்த ஆசிரியர் தன் மீது புகார் அளித்தால், என் சாவுக்கு நீங்கள் தான் காரணம் என்று அனைவரின் பெயரையும் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டினார். இதை தொடர்ந்து ஒன்று கூடி பேசிய ஊர் பிரமுகர்கள், பள்ளி மாணவிகளின் நலனை ஆலோசித்து, நாளை முதல் இந்த பள்ளியில் அந்த ஆசிரியர் வேலை செய்யக்கூடாது என்றும், பணி ஓய்வு பெறும் வரை பள்ளிக்கூடம் வரக்கூடாது என்றும் கூறி சென்றனர். இந்த முடிவிற்கு அந்த ஆசிரியரும் ஒப்புக்கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதிகளில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.