விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பத்தில் கடந்த சனிக்கிழமை இரவு கள்ளச்சாராயம் குடித்த 50க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, அவர்கள் எல்லோரும் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் ராஜமூர்த்தி, மலர்விழி, விஜயன், சுரேஷ், சங்கர், ராஜவேல், ஆபிரகாம் உள்ளிட்ட 12 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இத்தகைய நிலையில், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 38 வயதான ராஜவேல் என்பவர் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இதன் காரணமாக, ரெட்டியார் குப்பத்தில் கலாச்சாராயம் குடித்த சம்பவத்தில் பலியானவரின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்து இருக்கிறது. முண்டியம்பாக்கம் மற்றும் மரக்காணம் அரசு மருத்துவமனைகளில் 52பேர் ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார்கள் இதற்கிடையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான, கெமிக்கல் பேக்டரி உரிமையாளரை காவல்துறையினர் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.
சென்னை வானகரம் மேட்டுக்குப்பம் பகுதியில் விநாயகா எண்டர்பிரைசஸ் என்ற கெமிக்கல் ஃபேக்டரி நடத்தி வரும் மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த இளையநம்பியை ஏடிஎஸ்பி பாலமுருகன் தலைமையிலான காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட 8 பேரும் இளையநம்பியிடம் இருந்து சுமார் 600 லிட்டர் மெத்தனால் வாங்கியதாக கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இலையை நம்பியை காவல்துறையினர் கைது செய்து காஞ்சிபுரம் அழைத்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.