புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் இருக்கின்ற ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சார்ந்த மாணவிகள் 15 பேர் திருச்சி மாவட்டம் ஏழூர்பட்டியில் இருக்கின்ற தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் நடைபெறும் குடியரசு தின விழா விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக உடற்கல்வி ஆசிரியருடன் வருகை தந்துள்ளனர்.
இந்த போட்டியில் பங்கேற்ற மாணவிகள் அதன் பின் செல்லாண்டி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து குளிப்பதற்க்காக காவிரியாற்றில் இறங்கி இருக்கிறார்கள். அப்போது எதிர்பாராத விதமாக தமிழரசி, இனியா, லாவண்யா, சோபிகா என்ற 4️ மாணவிகள் நீரில் பரிதாபமாக மூழ்கி உயிரிழந்தனர்.
இது தொடர்பாக தகவல் அறிந்த மாயனூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வரைந்து சென்று திருச்சி மாவட்டம் முசிறி மற்றும் கரூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் நான்கு மாணவிகளின் உடல்களை மீட்டெடுத்தனர்.
இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சூழ்நிலையில், உயிரிழந்த தமிழரசி இனியா லாவண்யா கோபிகா உள்ளிட்ட 4 மாணவிகளின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
இந்த சூழ்நிலையில், அளவுக்கு மீறி மணல் எடுத்ததால்தான் பள்ளம் உண்டாகி உயிரிழப்பு ஏற்பட்டிருப்பதாக மாயனூர் பகுதி மக்கள் குற்றம் சாட்டியிருக்கிறார்கள் உள்ளூர் மக்களுக்கு அங்கே பள்ளம் இருப்பது தெரியும் என்பதால் அந்த பகுதிக்கு யாரும் சொல்வதில்லை என்றும் கூறியிருக்கிறார்கள்.
இந்த விபத்து தொடர்பாக உரையாற்றிய கரூர் மாவட்ட ஆட்சி தலைவர் எச்சரிக்கையை மீறி தண்ணீரில் இறங்கியதால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. அனுமதி இல்லாத பகுதிகளில் யாரும் இறங்கி குளிக்க கூடாது என்று அறிவுறுத்தி இருக்கிறார்.