சென்னை அருகே பல்லாவரம், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் சின்னதுரை (29). இவர் பெயிண்ட் அடிக்கும் கூலித்தொழிலாளி. சின்னதுரைக்கு திருமணமாகி மனைவி, இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இப்போது சின்னதுரை மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். தினமும் பகலில் வேலைக்கு செல்லும் சின்னதுரை, இரவில் பம்மல் பிரதான சாலையில் உள்ள நடைபாதையில் படுத்து உறங்குவது வழக்கம். அப்போது அதே இடத்தில் படுத்து உறங்கும் மதுரையைச் சேர்ந்த ராஜா(44) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நண்பர்கள் இருவரும் சேர்ந்து அமர்ந்து மது குடித்தனர். திடீரென அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது, வாக்குவாதம் முற்றியதால், ஆத்திரம் அடைந்த ராஜா, நண்பர் சின்னதுரையை தீர்த்துக்கட்ட முடிவு எடுத்தார். எனவே சின்னதுரை தூங்கும் வரை காத்திருந்தார் ராஜா. அதன்படி நள்ளிரவில் சின்னதுரை தூங்கியதும், ராஜா அருகில் கிடந்த பெரிய கல்லை தூக்கி சின்னதுரையின் தலையில் போட்டார். இதில் சின்னதுரை தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள், சின்னதுரை ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பல்லாவரம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், இறந்து கிடந்த சின்னதுரை உடற்கூறு ஆய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.