சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்துக்கு பிறகு, நெல்சன் திலீப்குமார் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிப்பதை உறுதி செய்து கடந்த பிப்ரவரி மாதம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டனர். சமீபத்தில் இந்த படத்துக்கு ஜெயிலர் என்று பெயர் வைத்து இருப்பதாக அறிவித்தனர். மேலும் ஐஸ்வர்யா ராய் கதாநாயகியாக நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.
சில தினங்களுக்கு முன் டெல்லி சென்று வந்த ரஜினிகாந்திடம் இதுபற்றி கேட்டபோது ஜெயிலர் படத்தில் அடுத்ததாக நடிக்க போகிறேன் என்றும் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்று தெரிவித்தார். இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. மேலும் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் ஏற்கனவே கூறியிருந்தார். இவர் வில்லனாக நடிக்கலாம் என்ற யூகங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்துடன் கதாநாயகியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்க இருப்பதாக தற்போது உறுதிப்படுத்தி இருக்கிறார். மேலும் 1999-ல் வெளிவந்த, படையப்பா படத்தில் ரஜினியுடன் நீலாம்பரி கதாபாத்திரத்தில் ரம்யாகிருஷ்ணன் நடித்தது பெரிய வரவேற்பை பெற்றது. 2002-ல் வெளியான பாபா படத்திலும் சிறிய வேடத்தில் வந்து சென்றார். 20-ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இருவரும் இணைந்து நடிப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரம்யா கிருஷ்ணன் தற்பொழுது விஜய்தேவரகொண்டாவுடன் லைகர் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.