குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வசித்து வரும் பியூஸ் சர்மா மகாராஷ்டிராவின் தானே நகரத்தில் இருக்கும் ஜிபி சாலையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் அக்கவுண்ட் வைத்திருந்தார். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் டெல்லியில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டார்.
அவர் உயிரிழந்ததை தொடர்ந்து, அவருடைய தந்தை சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி அந்த வங்கி அணுகி இறந்துவிட்ட தன்னுடைய மகனின் வாங்கிக் கணக்கில் தானும் ஒரு நாமினியாக உள்ளதாக தெரிவித்து வங்கியின் அறிக்கையை கேட்டார்.
ஆனால் அந்த அறிக்கையில் அந்த நபருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி முதல் 2022 ஏப்ரல் 22ஆம் தேதி வரையில் குமார் தீபக், குமார்.டி குமார் தீப் மற்றும் குமாரி ராஸ் உள்ளிட்டோருக்கு 28.3 லட்சம் ரூபாய் பணம் அந்த வங்கி கணக்கில் இருந்து மாற்றப்பட்டு இருப்பதை அவர் கண்டுபிடித்தார். இது தொடர்பாக காவல்துறையில் புகார் வழங்கிய நிலையில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ய மறுத்துவிட்டதாக தெரிகிறது.
இதன் காரணமாக, பியூஸ் சர்மாவின் குடும்பத்தினர் சார்பாக நீதிமன்றத்தை நாடினர். நீதிமன்றத்தின் மேஜிஸ்ட்ரேட் பி.எஸ்.துமாலின் உத்தரவின் அடிப்படையில் இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 156(3)ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. என்று வழக்கறிஞர் வைபவ் சதம் கூறியுள்ளார்