திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் அதிமுக கட்சியின் நிறுவனர் எம்ஜிஆர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா என்று முப்பெரும் விழா மாநாடு நடந்தது. ஓபிஎஸ் அணியின் சார்பாக நடைபெற்ற இந்த மாநாட்டில் 25,000க்கும் அதிகமானோர் பங்கேற்றுக் கொண்டனர்.
அதிமுகவின் சின்னம் மற்றும் கொடியை பயன்படுத்துவதற்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு தேர்தல் ஆணையம் தரப்பில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தாலும் இந்த மாநாட்டில் அதிமுக கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தனர். மாநாட்டில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்சுக்கு செங்கோல் வழங்கி கௌரவித்திருந்தார்கள்.
இந்த மாநாட்டில் உரையாற்றிய ஓபிஎஸ் கோடிக்கணக்கில் பணத்தை குவித்து வைத்து மாவட்ட செயலாளர்களை எடப்பாடி பழனிச்சாமி விலைக்கு வாங்கி இருப்பதாக குற்றம் சுமத்தினார். கட்சியின் நிதியை தவறாக பயன்படுத்துவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா தான் என்று பொதுக்குழுவில் தீர்மானத்தை நிறைவேற்றினோம். அதற்கு பின்னர் அதிகாரத்திற்கு வந்த சில அரசியல் வித்தகர்கள், வியாபாரிகள், நயவஞ்சகர்கள், நம்பிக்கை துரோகிகள் 50 ஆண்டுகால அதிமுகவை அபகரிக்கும் விதத்தில் அந்த தீர்மானத்தை ரத்து செய்தார்கள் என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.
அதோடு என்னை 2 முறை ஜெயலலிதா முதலமைச்சராக்கினார்கள் 3வது முறை சசிகலா தான் என்னை அந்த பதவியில் அமர வைத்தார்கள். அப்போது என்னிடம் பதவியை திரும்ப கேட்டார்கள் கொடுத்துவிட்டு வந்து விட்டேன் என்று உரையாற்றினார் பன்னீர்செல்வம்.
மேலும் தனக்கு மீண்டும் முதல்வராகவோ அல்லது பொதுச்செயலாளராவோ இருக்க விருப்பமில்லை எனவும் உங்களில் ஒருவராக தூய தொண்டர்களில் ஒருவரை முதல்வராகும் கடமை எனக்கு இருக்கிறது அதைத்தான் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா விரும்பினார்கள் என்று ஓபிஎஸ் கூறியுள்ளார்.