சென்னை, ஆதம்பாக்கத்தில் உள்ள சினிமா தயாரிப்பாளர் பாஸ்கரன் (65). இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர் கட்டுமான தொழிலும் செய்து வந்துள்ளார். இந்நிலையில் விருகம்பாக்கம், செனாய் நகர், கூவம் அருகில் கருப்பு நிற கவரில் கை, கால்கள் கட்டப்பட்டு வாயில் துணி அடைத்த நிலையில் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்த துப்புரவு பணியாளர் ஒருவர் விருகம்பாக்கம் காவல் நிலையத்திற்க்கு தகவல் அளித்தார். தகவல் அறிந்த காவல்துறையினர் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் பாஸ்கரன் என்பதை உறுதி செய்தனர்.
அதன் பிறகு பாஸ்கரன் கொலைக்கு காரணம் தொழில் போட்டியா, அல்லது முன் விரோதம் காரணமா என பல்வேறு கோணங்களில் விருகம்பாக்கம் காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாக கொலையாளியை தேடி வந்தனர். மேலும் அதே பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டை பூட்டி விட்டு தப்பி சென்ற கணேசன் (50), என்பவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் தனிப்படை காவல்துறையினர் செங்குன்றம் அருகே பதுங்கி இருந்த கணேசனை கைது செய்து விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
கணேசன் விருகம்பாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வந்தார். இவர் சினிமா படங்களுக்கு கதை எழுதுவதாக சொல்லி அந்த வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முதல் மனைவியை பிரிந்து இரண்டாவது மனைவி மற்றும் மகனுடன் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த ஏழு வருடங்களாக பாஸ்கரனுடன், கணேசனுக்கு பழக்கம் இருந்துள்ளது. கணேசன் பாலியல் தொழில் செய்யும் புரோக்கராக இருந்து வந்துள்ளார். இளம் பெண்கள் மற்றும் துணை நடிகைகளுடன், பாஸ்கரன் உல்லாசம் அனுபவிக்க ஏற்பாடு செய்து கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பெண்கள் வர தாமதம் ஏற்பட்டதால் பாஸ்கரனுக்கும், கணேசனுக்குமிடையே வாக்குவாதம் நடந்துள்ளது.
இதில் ஆத்திரமடைந்த கணேசன் இரும்பு கம்பியால் பாஸ்கரன் தலையில் தாக்கியுள்ளார். அதன் பிறகு கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடலை கருப்பு நிற கவரால் சுற்றி கயிறால் கட்டி நள்ளிரவில் பைக்கில் எடுத்து சென்று அந்த பகுதியில் வீசி விட்டு தலைமறைவாகியுள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து பாஸ்கரனை கொலை செய்ய பயன்படுத்திய கம்பி, பைக் முதலியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்திள்ளது. இந்நிலையில் இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா, அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.