சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகேயுள்ள தின்னபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (32). இவர் திருச்சியில் உள்ள தனியார் டயர் கம்பனியில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி திவ்யா (28). இந்த தம்பதியினருக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் சதீஷ்குமார் டயர் கம்பெனி வேலையை ராஜினாமா செய்து விட்டு வீட்டில் இருந்தார். அப்போது மொபைல் ஆப்கள் மூலம் ஆன்லைனில் பல லட்ச ரூபாய் கடனாக பெற்றுள்ளார்.
இதற்கிடையே, வாங்கிய கடனுக்கான தவணை தொகையாக ரூ. 15 லட்சம் வரை திருப்பி செலுத்தியுள்ளார். வாங்கிய கடனை விட பல மடங்கு அதிகமாக பணத்தை திருப்பி செலுத்திய நிலையில், கடன் கொடுத்த நிறுவனத்தின் ஊழியர்கள் தினமும் சதீஷ்குமாரை செல்ஃபோனில் அழைத்து நிலுவை தொகை இருப்பதாகவும், அதனை உடனே செலுத்தும்படியும் மிரட்டல் விடுத்துள்ளனர். பணம் செலுத்தவில்லை என்றால் சதீஷ்குமாருடன் தொடர்பில் இருக்கும் அனைவருக்கும், அவரது குடும்பத்தை கேவலமாக சித்தரித்து வெளியிடுவோம் என மிரட்டியுள்ளனர்.
இதன் காரணமாக மனமுடைந்த சதீஷ்குமார், தனது மனைவி மற்றும் மகனை அழைத்துக்கொண்டு ஓமலூர் பகுதியில் தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். இதன் பின்னர் 60 தூக்க மாத்திரைகளை வாங்கி அதை தனது மனைவி மற்றும் மகனுக்கு கொடுத்துவிட்டு அவரும் உட்கொண்டுள்ளார். இந்த நிலையில் மூன்று பேரும் அரையிலேயே மயங்கி கிடந்துள்ளனர். இதற்கிடையே அவரை தேடிவந்த உறவினர்கள், விடுதி அறையில் மயங்கி கிடந்த 3 பேரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஓமலூர் காவல்துறையினர், அவர்களை மிரட்டிய நபர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.