நவிமும்பை அருகே உரண் பகுதியில் வசித்து வருபவர் சமாதான் (35). இவரது மனைவி விஜயா (34). விஜயாவுக்கு ஏற்கனவே திருமணமாகி கணவர் இறந்ததால், இரண்டாவதாக சமாதானை கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் விஜயாவின் நடத்தையில் சமாதானுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே சமாதான் அவரது மனைவியை கொலை செய்ய திட்டம் போட்டார்.
அவர் போட்ட திட்டத்தின்படி சம்பவத்தன்று சமாதான் அவரது மனைவி விஜயாவை அளவுக்கதிகமாக, மது குடிக்க வைத்தார். அதன் பிறகு போதையில் இருந்த விஜயாவை ஜம்புல்பாடாவில் உள்ள ஒரு குளத்தில் மூழ்கடித்து கொலை செய்தார். இரண்டு நாட்கள் கழித்து விஜயாவின் உடல் குளத்தில் மிதந்தது. இதைத்தொடர்ந்து சமாதான் தனது தம்பி நன்னாத், நண்பர் கஜானன் ஆகியோரின் உதவியுடன் விஜயாவின் உடலை குளத்தில் இருந்து எடுத்து குழி தோண்டி புதைத்துள்ளனர்.
இந்நிலையில் விஜயா காணாமல் போனது குறித்து அவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இந்த கொலை சம்பவம் தெரியவந்தது. அதன்பேரில் காவல்துறையினர், கொலை வழக்கு பதிவு செய்து விஜயாவின் கணவர் சமாதான் உட்பட மூன்று பேரை கைது செய்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.