12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நாளை காலை 9.30 மணி அளவில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இருந்து வெளியிடுவார் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்திருக்கிறது.
இதுகுறித்து அரசு தேர்வுகள் துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டிருக்கிற அறிக்கையில், நாளை காலை 9.30 மணி அளவில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு முடிவுகளை அறிவிப்பார். அதோடு இந்த தேர்வு குறித்து பள்ளி பகுப்பாய்வு அறிக்கையினை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக காலை 9 40 மணியளவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த தேர்வு முடிவுகள் www.tnresult.nic.in, www.dge1.nic.in என்ற அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளத்தின் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்.
பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பே சி எண்ணுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். தனித் தேர்வர்களுக்கும் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலமாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.
அத்துடன் தேர்வு முடிவில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் ஸ்கேன் செய்யப்பட்டுள்ள தங்களுடைய விடைத்தாள் நகலை கேட்டு பெற்று அதனை ஆய்வு செய்து கூடுதல் மதிப்பெண் பெற முடியும் என்று நினைத்தால் மறு கூட்டல், மதிப்பீட்டிற்கு விண்ணப்பம் செய்யலாம்.
அதோடு தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறும் சிறப்பு துணை தேர்வில் பங்கேற்றுக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படும். ஒரு முழு கல்வி ஆண்டு வீணாகாமல் இதில் தேர்ச்சி பெற்று இந்த வருடத்திலேயே உயர்கல்வியை தொடர் இயலும் என்று கூறப்பட்டுள்ளது.