தமிழ் புத்தாண்டாம் சித்திரை மாதம் முதல் நாளை உலகத்தில் உள்ள தமிழர்கள் எல்லோரும் தமிழ் வருட பிறப்பாக மிக சிறப்பாக ஆண்டுதோறும் கொண்டாடி வருவார்கள். அந்த வகையில் இந்த வருடம் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி நாளைய தினம் தமிழ் புத்தாண்டு பிறக்க உள்ளது.
இதனை தொடர்ந்து, நாளை வெள்ளிக்கிழமை என்பதால் அதற்கடுத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருகிறது. ஆகவே சென்னை கோயம்பேட்டில் இருந்து இன்று கூடுதலாக 500 பேருந்துகளை இயக்குவதற்கு தமிழக போக்குவரத்து துறை முடிவெடுத்துள்ளது.
அதோடு வரும் 22ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை வர உள்ளதால் ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி 500 சிறப்பு பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை கூறியுள்ளது. விழுப்புரம், கும்பகோணம், கோவை, சேலம் மற்றும் மதுரை போன்ற பகுதிகளுக்கு இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது.
விடுமுறை காலங்களில் பொதுமக்கள் பேருந்து நிலையங்களில் வாகனங்களுக்கு அலைமோதி தவித்து நிற்பதை கட்டுக்குள் வைப்பதற்காக இந்த முயற்சி முன்னெடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.