புதுச்சேரி, லாஸ்பேட்டை பகுதியில் உள்ள பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் பரமசிவம் (50). இவர் சண்டே மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு, மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.கடந்த ஜூலை மாதம் 20 ஆம் தேதியண்று, இவரது வீட்டின் மீது மர்ம நபர் ஒருவர் நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளார். இந்த சம்பவம் குறித்து லாஸ்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணயில், பரமசிவத்தின் 2வது மகன் விக்கி என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் ஒருவருக்கும் முன்விரோதம் இருந்தது தெரிய வந்தது. இதன் பின்னர், அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை கைப்பற்றிய காவல்துறையினர், அவற்றை ஆய்வு செய்தனர். அதில் லாஸ்பேட்டை அருகேயுள்ள நெருப்புக்குழி, ராமதாஸ் தெருவை சேர்ந்த 17 வயது சிறுவன் நாட்டு வெடிகுண்டு வீசியது தெரியவந்தது. நேற்று முன்தினம் அச்சிறுவனை கைது செய்து, விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் விக்கி தனது தாயாருக்கும், அவர் வேலை செய்துவரும் காண்ட்டிராக்டருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக அவதூறு பரப்பி வந்ததால் அவர் மீது விரோதம் கொண்டதாகவும், அவரை பயமுறுத்த நாட்டு வெடி குண்டை அவர் வீட்டின் மீது வீசியதாகவும் ஒப்புக் கொண்டார். மேலும் தனது செல்ஃபோனில் ‘யூ-டியூபில் வெடிகுண்டு தயாரிப்பது எப்படி என பார்த்து தெரிந்து கொண்டு அதனை தானே தயாரித்ததாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அந்த சிறுவன், சீர்திருத்த பள்ளியில் ஒப்படைக்கப்பட்டார்.