கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கணக்குப்பிள்ளையூரை சேர்ந்தவர் குரு பிரகாஷ். இவர் அய்யர்மலையில் உள்ள டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை 2ம் ஆண்டு படித்து வருகின்றார்.
இந்த நிலையில், குரு பிரகாஷும் அதே கல்லூரியில் படிக்கும் அய்யர்மலை பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் தான் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாக காதலர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அவர்கள் இருவரும் பிரேக் அப் செய்து கொண்டனர். அதன் பின்னர் அந்த மாணவி கீழக்குட்டப்பட்டியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார் என்பவரை காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.
அந்த கல்லூரி மாணவிக்கும் ஆட்டோ ஓட்டுனர் அருண்குமாருக்கும் இடையிலான காதல் ஒரு புறம் சென்று கொண்டிருக்க, மறுபுறமோ குரு பிரகாஷ் மறுபடியும் அந்த கல்லூரி மாணவியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அப்போது அந்த கல்லூரி மாணவியின் காதலன் ஆட்டோ ஓட்டுநர் அருண்குமாரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். அந்த கல்லூரி மாணவி.
ஆகவே இது தொடர்பாக அருண்குமார் குரு பிரகாஷிடம் கடந்த 14 ஆம் தேதி பேசிய போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது ஆகவே இதனை மனதில் வைத்துக் கொண்டு அருண்குமார் நேற்று கல்லூரி மாணவர்கள் செல்லதுரை, விஜய் உள்ளிட்டோரின் மூலமாக சமாதானம் பேசுவதற்காக குரு பிரகாஷை அழைத்துள்ளார். அப்போது குரு பிரகாஷின் பெரியப்பா மகன் விக்னேஸ்வரனும், குரு பிரகாஷும் சென்றுள்ளனர்.
இத்தகைய சூழ்நிலையில்தான் அய்யர்மலை தெப்பக்குளத்தில் வைத்து குரு பிரகாஷை அருண்குமார் மற்றும் அவருடைய சகோதரர் ஷங்கர், கல்லூரி மாணவர்கள் செல்லதுரை, விஜய், சரவணன் உள்ளிட்ட பலரும் தாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
குரு பிரகாஷை தாக்குவதை தடுப்பதற்கு முயற்சி செய்த விக்னேஸ்வரனையும் அவர்கள் தாக்கி உள்ளனர். அவரை உருட்டு கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியதால் அவர் படுகாயம் அடைந்தார்.
அவர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த குரு பிரகாஷ் மற்றும் விக்னேஸ்வரன் உள்ளிட்ட இருவரும் குளித்தலை அரசு மருத்துவமனையின் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இதில் தலையில் படுகாயம் அடைந்த விக்னேஸ்வரன் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டும் பலன் இல்லாமல் விக்னேஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து குளித்தலை காவல்துறையினர் கீழ கொட்டப்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார் வீரகுமாரன் பட்டியை சேர்ந்த செல்லதுரை, கண்டியூரைச் சேர்ந்த விஜய், வை.புதுரை சேர்ந்த சரவணன் உள்ளிட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். அத்துடன் தலைமறைவாக இருந்த சந்தோஷ் குமார் என்ற கல்லூரி மாணவனை குளித்தலை காவல்துறையினர் நேற்று மாலை கைது செய்தனர். இவர்கள் அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி நீதிபதியின் உத்தரவின் பேரில் திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
.