திருப்பத்தூர் அருகே உள்ள எலவம்பட்டி ஊராட்சி செல்ரப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் விவேகானந்தன் (58). இவரது மனைவி ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். இந்நிலையில் விவேகானந்தனுங்கு சொந்தமான விவசாய கிணற்றில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதியில் உள்ளவர்கள் கூறியதால். அங்கு சென்று கிணற்றில் பார்த்தபோது, 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து உடனே கந்திலி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின்பேரில் கந்திலி காவல்துறையினர் மற்றும் நாட்றம்பள்ளி தீயணைப்பு துறையினர், ஆகியோர் சென்று பார்த்தபோது பெண்ணின் உடல் தனியாகவும், தலை தனியாகவும் கிடந்தது. உடல் அடையாளம் காணமுடியாத அளவுக்கு அழுகிப்போய் இருந்தது. தீயணைப்புத் துறையினர் கிணற்றில் இறங்கி இளம்பெண்ணின் உடல் மற்றும் தலையை மேலே எடுத்தனர்.
இதைதொடர்ந்து உடற்கூறு ஆய்விற்காக வேலூர் அடுக்கம்பாறை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக கிடந்த பெண் யார் என்பதும், எந்த ஊரை சேர்ந்தவர் என்பதும் தெரியவில்லை. எனவே இதுகுறித்து கந்திலி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அந்த பெண்ணை யாராவது கொலை செய்து கிணற்றில் வீசிச்சென்றார்களா என்று, தனிப்படை அமைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். கிணற்றில் ஒரு பெண் உடல் தனியாகவும், தலை தனியாகவும் கிடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.