சென்னை மதுரவாயலில் சிறுமியிடம் பாலியல் தெல்லை கொடுக்க முயன்று, அடி வாங்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பூசாரி தப்பியோடினார். பூசாரியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சென்னை மதுரவாயல் அருகே கந்தசாமிநகர், 5-வது தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் அதே பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் பூசாரியாக இருக்கிறார். இந்நிலையில் அந்த கோவிலுக்கு தனது 14 வயது மகளை அழைத்து சென்ற பெண்ணிடம், அவரது மகளுக்கு சுற்றிப்போட வேண்டும் என பூசாரி சந்திரசேகர் சொல்லியதாக கூறப்படுகிறது. இதனால், பூசாரி வீட்டிற்கு தனது மகளை அழைத்துச் சென்ற சிறுமியின் தாய், சிறுமிக்கு சுற்றிப்போட்டு விட்டு அவரது வீட்டிலேயே தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது சிறுமியிடம் பூசாரி தவறாக நடப்பதாக தகவல் வந்ததால், சிறுமியின் பெற்றோர் பூசாரி சந்திரசேகரை சரமாரியாக அடித்தனர். இதனால் காயமடைந்த சந்திரசேகர், கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையில் சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பூசாரி சந்திரசேகர், ஆஸ்பத்திரியிலிருந்து தப்பி சென்றுவிட்டார். அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.