பாகிஸ்தானை சேர்ந்தவர் சானியா கான் (29). இவர் அமெரிக்காவில் புகைப்பட கலைஞராக இருந்து வந்துள்ளார். 2021ம் ஆண்டு ஜூனில் சிகாகோ நகருக்கு குடிபெயர்ந்து இருக்கிறார். இவரது முன்னாள் கணவர் ரஹீல் அகமது (36). அமெரிக்காவில் ஜார்ஜியா மாகாணத்தில் ஆல்பாரெட்டா நகரில் வசித்து வந்தார். இந்நிலையில் அகமது, சிகாகோவில் உள்ள சானியாவின் வீட்டுக்கு சென்றுள்ளார்.
இதைதொடந்து அகமது மற்றும் சானியா இருவரும் துப்பாக்கியால் தலையில் சுடப்பட்டு சானியாவின் வீட்டில் கிடப்பது பற்றிய தகவல் கிடைத்து சிகாகோ காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். இதில், சானியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அகமது மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், ஹாஸ்பிடலில் அகமது உயிரிழந்துள்ளார்.
சானியா அவர் வெளியிட்ட டிக்டாக் வீடியோவில், திருமணமான ஒரு வருடத்திற்குள்ளாகவே, விவாகரத்துக்கு விண்ணப்பித்து இருப்பது குறித்து விவரம் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், தனது திருமணத்திற்கு பிறகு நடந்த போராட்டங்களை பற்றி கூறியுள்ளார். விவாகரத்து பெற்ற பிறகு ஒரு புது வாழ்க்கையை தொடங்குவது பற்றியும் அவர் கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அகமது, நேராக சானியாவின் வீட்டிற்கு வந்து சானியாவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அவரும் தற்கொலையும் செய்து கொண்டார் என கூறப்படுகிறது.
இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப வன்முறைக்கு எதிரான தேசிய கூட்டணி அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியின்படி, அமெரிக்காவில், கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு வருடத்திற்கு, வயதுக்கு வந்த 1 கோடி பேர் குடும்ப வன்முறையில் சிக்கிய அனுபவங்களை பெற்றுள்ளனர், என தெரிய வந்துள்ளது. இதனை உலக சுகாதார அமைப்பு மேற்கொண்ட ஆய்வும் உறுதி செய்துள்ளது.