மும்பை சாந்தாகுருஸ் பகுதியில் வசித்து வருபவர் சாகர் ஜாதவ் (19). இவர் நேற்று வீட்டின் அருகே போடப்பட்டு இருந்த கணபதி மண்டலுக்கு சென்றிருந்தார். பிறகு தனது காதலிக்கு வீடியோ காலில் பேசி தரிசனத்திற்கு வரும்படி தெரிவித்தார். இதற்கு அவரது காதலி மறுத்துள்ளார். இதனால் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கணபதி மண்டலுக்கு வரவில்லை என்றால் தீக்குளிக்க போவதாக காதலியை மிரட்டினார்.
ஆனால் சாகர் ஜாதவ் நாடகம் ஆடுவதாக நினைத்த அவரது காதலி அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்நிலையில் திடீரென சாகர் ஜாதவ் தீக்குச்சியை எடுத்து பற்ற வைத்தார் அப் போது அவர் அணிந்திருந்த காட்டன் சட்டையில் தீ பற்றி கொண்டது. இதனால் தீ மள மள வென பரவியதால் சத்தம் போட்டார். இந்த சம்பவத்தை அந்த பெண் வீடியோ அழைப்பில் நேரலையாக கண்டதால் அதிர்ச்சி அடைந்தார். மேலும் இதுகுறித்து அறிந்த சாகர் ஜாதவின் பெற்றோர் சம்பவ இடத்திற்கு சென்று சிகிச்சைக்காக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவருக்கு 30 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை அளித்து வருகின்றனர். தகவல் அறிந்த வக்கோலா காவல்துறையினர் அங்கு சென்று விசாரணை செய்தனர். இதில் தனது செயலுக்கு யாரும் காரணம் இல்லை என அந்த இளைஞர் கூறியுள்ளார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கணபதி மண்டல் அருகே இளைஞர் தீக்குளித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.