கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில், உள்ள பைசன்வாலி பகுதியில் வசித்து வருபவர் மகேந்திரன், பழங்குடியினத்தை சேர்ந்தவர். மகேந்திரனும் அவரது நண்பர்களும் சேர்ந்து கடந்த 27 ஆம் தேதி காட்டு பகுதிக்கு வேட்டையாட சென்றனர். பின்னர் நண்பர்கள் வீடு திரும்பினர். ஆனால் மகேந்திரன் அவர்களுடன் திரும்பி வரவில்லை.
நண்பர்களிடம் கேட்ட பொழுது மகேந்திரன் வழிமாறி சென்றிருக்கலாம் என்று நண்பர்கள் கூறினர். இதையடுத்து, பழங்குடியின மக்கள் காட்டுக்குள் மகேந்திரனை தேடி வந்தனர். இதுகுறித்து பழங்குடியின மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ராஜாக்காடு காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். அப்போது சந்தேகத்தின்பேரில், மகேந்திரனின் நண்பர்கள் இருவரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் உண்மையை ஒப்புக்கொண்டனர். மேலும் வேட்டையாடுவதற்காக கையில் இருந்த நாட்டு துப்பாக்கியால் சுட்டபோது, தவறுதலாக மகேந்திரன் உடலில் பட்டதால் அவர் இறந்துவிட்டதாகவும், இது வெளியே தெரிந்தால் பிரச்சினை வரும் என்பதால் வனப்பகுதியில் குழிதோண்டி மகேந்திரனை புதைத்தாக அவர்கள் கூறினர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.