நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கி கொடூரமான முறையில் துன்புறுத்துவதாக உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர்சிங் மீது குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. ஆகவே அவர் மீது பாதிக்கப்பட்ட 8க்கும் அதிகமானவர்கள் புகார் வழங்கினர்.
இந்த விவகாரம் மாநில அளவில் மிகப் பெரிய சர்ச்சையை உண்டாக்கியது. இந்த நிலையில் தான் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் ஏ எஸ் பி ஆக பணியாற்றி வந்த பல்வீர்சிங் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய குற்றச்சாட்டின் பேரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, அந்தப் புகார் குறித்து உதவி ஆட்சியர் விசாரணை மேற்கொண்டார். அவருடைய விசாரணையில் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களுக்கு உண்டான பாதிப்புகள் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் கொடுத்தனர். ஆகவே இந்த புகார் குறித்து மூத்த ஐஏஎஸ் அதிகாரியான அமுதா விசாரணை மேற்கொண்டார்.
இதற்கு நடுவில் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி காவல் நிலையங்களின் ஆய்வாளர்கள் பெருமாள், சந்திரமோகன், ராஜகுமாரி உள்ளிட்டோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். அதேபோன்று காவல் உதவி ஆய்வாளர் சக்தி நடராஜன், காவலர்கள் மணிகண்டன், சந்தனகுமார் உள்ளிட்டோரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து ஐஏஎஸ் அதிகாரி அமுதா இரு கட்டங்களாக விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் வேத நாராயணன், பாபநாசம் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் உள்ளிட்டோர் வழங்கிய புகார்களின் அடிப்படையில், சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இத்தகைய நிலையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் மற்றும் சில காவல்துறையினர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சிபிசிஐடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இத்தகைய நிலையில், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலைய காவலர்கள் சுமார் 24 பேரை பணியிட மாற்றம் செய்து திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.