தூத்துக்குடி மாவட்டம், தென்பாகம் காவல் நிலையம் எதிரே பிரபல நகைக்கடை ஒன்று இருக்கிறது. இந்த கடைக்கு மதிக்கத்தக்க வகையில் உடை அணிந்து வந்த இரண்டு பெண்கள் பத்து பவுன் நகையை வாங்க விலை பேசுவது போல் பேசியுள்ளனர். பிறகு அங்கு வேலை பார்ப்பவர்களிடம், கடை முதலாளி எங்கே என கேட்டுள்ளனர். மேலும் முதலாளியை வரச் சொல்லுங்கள் என அதிகாரி தோரணையில் கூறியுள்ளனர்.
இதற்கு அங்கு வேலை பார்ப்பவர்கள் என்ன காரணம் எங்களிடம் சொல்லுங்கள் என கேட்டதற்கு நாங்கள் விஜிலன்ஸ் ஆபீஸர்கள் என கூறி ஐ.டி கார்டு ஒன்றைக் காண்பித்துள்ளனர். பிறகு அந்த இரண்டு பெண்களும், நாங்கள் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு 10 சவரன் நகையை எங்களுக்குத் தரவேண்டும் என்று கூறியுள்ளனர். இதனால் கடையில் உள்ளவர்களுக்கு இரண்டு பேர் மீதும் சந்தேகம் வந்தது. இதைத்தொடர்ந்து, வேலை செய்பவர்கள் முதலாளியிடம் பேசிவிட்டுச் சொல்வதாகக் கூறி இருவரையும் தனியாக அமரவைத்து அவர்களுக்கு குடிக்க கூல்டிரிங்ஸ் கொடுத்தனர். உடனே இதுபற்றி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே அங்குவந்த காவல்துறையினர் இரண்டு பெண்களையும் பிடித்து விசாரணை செய்ததில் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் கிராமத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி (36), பெரிய கடை கிராமத்தைச் சேர்ந்த பரமேஸ்வரி (36), என்று தெரியவந்தது. இருவரும் விஜிலன்ஸ் அதிகாரிகள் என கூறி நகைக்கடையில் கொள்ளையடிக்க முயற்சிசெய்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பெண்கள் இதுபோன்று வேறு எங்காவது கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்து காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.