ஏப்ரல் 1 முதல் சுங்க வரியை அதிகரிக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..
தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகள், 2008-ன் படி ஆண்டுக்கு ஒரு முறை சுங்க வரி கட்டணம் திருத்தப்பட்டு வருகிறது.. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கட்டண திருத்தம் குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.. திருத்தப்பட்ட கட்டண விகிதங்களுக்கான முன்மொழிவு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின், அனைத்து திட்ட அமலாக்கப் பிரிவிடமிருந்து (PIU) மார்ச் 25ம் தேதிக்குள் அனுப்பப்பட உள்ளது.. இந்த கட்டண உயர்வுக்கு சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல் அளித்த பிறகு ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் அமல்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது..
![யாருக்கெல்லாம் சுங்கச்சாவடியில் கட்டணம் இல்லை..? வாட்ஸ் அப்பில் தீயாய் பரவும் தகவல்..!! உண்மை என்ன?](https://1newsnation.com/wp-content/uploads/2022/08/Toll-1.jpg)
இதனால் ஏப்ரல் 1 முதல் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகளில் பயணம் செய்வது சற்று விலை உயர்ந்ததாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி கார்கள் மற்றும் இலகுரக வாகனங்களுக்கு ஒரு பயணத்திற்கு 5 சதவீதம் கூடுதலாக வசூலிக்கப்படும், கனரக வாகனங்களுக்கான சுங்கவரி 10 சதவீதம் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது…
2022 ஆம் ஆண்டில், சுங்கச்சாவடி வரி வரம்பு 10 முதல் 15 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது, தேசிய நெடுஞ்சாலைகளில் ஓடும் அனைத்து வகையான வாகனங்களின் கட்டண விலையும் ரூ.10 மற்றும் ரூ.60 உயர்த்தப்பட்டது. தற்போது விரைவுச் சாலையில் ஒரு கிலோ மீட்டருக்கு 2.19 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சுங்கச்சாவடியில் இருந்து 20 கிலோமீட்டர் பகுதியில் வசிப்பவர்களுக்கு வழங்கப்படும் மலிவான சலுகையான மாதாந்திர பாஸ் வசதியும் 10 சதவீதம் அதிகரிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன..
தேசிய சாலைகள் கட்டண விதிமுறைகள் 2008ன் படி, சுங்கச்சாவடியில் இருந்து ஒரு குறிப்பிட்ட சுற்றளவில் வசிப்பவர்களுக்கு விலக்கு அளிக்க எந்த ஏற்பாடும் இல்லை. எவ்வாறாயினும், வணிக ரீதியான பயன்பாட்டிற்காக பதிவுசெய்யப்பட்ட வாகனத்தை வைத்திருக்கும் மற்றும் சுங்கச் சாவடியிலிருந்து 20 கிலோமீட்டருக்குள் வசிக்கும் ஒருவர், சுங்கச்சாவடி வழியாக மேற்கொள்ளும் வரம்பற்ற பயணங்களுக்கு 2022-23 நிதியாண்டில் மாதத்திற்கு ரூ. 315 என்ற விகிதத்தில் மாதாந்திர பாஸ் பெற தகுதியுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது..