தற்போதைய பொருளாதார மந்தநிலை காரணமாக ஆப்பிள், ட்விட்டர், மெட்டா மற்றும் அமேசான் போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்கள் கூட வருவாய் சிக்கலை எதிர்கொள்கின்றனர். இதனால், அனைத்து துறைகளிலும் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு ஆயிரக்கணக்கான மக்கள் வேலை இழந்துள்ளனர். இந்தாண்டும் இதே பதற்றம் தொடர்கிறது. அமேசான், சிஸ்கோ, சேல்ஸ்ஃபோர்ஸ் மற்றும் ஓலா நிறுவனங்களின் சமீபத்திய பணிநீக்க நடவடிக்கைகள் எடுத்த நிலையில், தற்போது வோடஃபோன் நிறுவனமும் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.

உலகெங்கிலும் சுமார் 104,000 பேர் பணிபுரியும் பன்னாட்டு தொலைத்தொடர்பு நிறுவனம் வோடஃபோன் ஆகும். இந்நிலையில், லண்டன் தலைமையகத்தில் உள்ள ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. Vi என்ற பிராண்டின் கீழ் Vodafone ஐடியாவுடன் இயங்கும் இந்தியாவில் எத்தனை ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஃபைனான்சியல் டைம்ஸின் தகவலின்படி, கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவி்ல் பணிநீக்க நடவடிக்கைகள் இருக்கும் என்று தெரிகிறது. குறிப்பிடத்தக்க வகையில், வோடபோன் கடந்த சில ஆண்டுகளில் வருவாய் வீழ்ச்சியை எதிர்கெண்டு வருகிறது. லாபத்தை சமநிலைப்படுத்த முயற்சிக்கிறது. மேலும், வோடஃபோன் நிறுவனம் தனது மதிப்பில் 40 சதவீதத்தை இழந்தது. இதனால், நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நிக் ரீடும் தனது பதவியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.