நிலவின் மேற்பரப்பில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக ரூ.615 கோடி செலவில் வடிவமைக்கப்பட்ட சந்திரயான் – 3 விண்கலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் கடந்த 14ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. புவி சுற்று வட்டப்பாதையில் இது அன்றைய தினமே நிலைநிறுத்தப்பட்டது. பின்னர், படிப்படியாக விண்கலம் அடுத்தடுத்த சுற்றுப்பாதைகளுக்கு உயர்த்தப்படுகிறது.
சந்திரயான் 3 விண்கலத்தை புவி சுற்றுவட்டப்பாதையின் 5-வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் முயற்சி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் 5-வது கட்டமாக சந்திரயான் விண்கலத்தின் சுற்று வட்டப்பாதை உயர்த்தப்பட்டது. விண்கலம் 127609 km x 236 km சுற்றுவட்டப்பாதையை அடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், கண்காணிப்புக்கு பிறகு இந்த சாதனை குறித்து பகிரப்படும் எனவும் இஸ்ரோ தெரிவித்தது.
இந்நிலையில், விண்கலம் 5 அடுக்கு கொண்ட புவி வட்டத்தின் சுற்றுப் பாதையை நிறைவு செய்துவிட்டு நள்ளிரவு 12 மணி முதல் 1 மணி இடையே நிலவின் நீள்வட்டப் பாதையை நோக்கிய பயணத்தை தொடங்கியுள்ளது. இதையடுத்து, சந்திரயான்-3 ஆகஸ்ட் 5, 2023இல் சந்திர சுற்றுப்பாதை முழுதாக செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. மேற்கண்ட முயற்சிகள் வெற்றிபெறும்பட்சத்தில், ஆகஸ்ட் 23ம் தேதி நிலவின் மேற்பரப்பில் சந்திரயான்-3 லேண்டரை மென்மையாக தரையிறக்க உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.