கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் குண்டு வெடித்த இடத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை.
கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் நடைபெற்ற வழிபாட்டு கூட்டத்தில் வெடிகுண்டு வெடித்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. களமச்சேரி பகுதியில் 1000 பேர் கலந்துகொண்ட ஜெப கூட்டம் நிகழ்ச்சி நடந்துள்ளது. அப்போது சுமார் 9.45 மணிக்கு இரண்டு முறை குண்டு வெடிப்பு நடந்துள்ளது. குண்டு வெடிப்பை அடுத்து, இடம் முழுவதும் தீ பற்றி எறிந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பை அடுத்து அங்கிருந்த மக்கள் உடனடியாக வெளியேறியுள்ளனர். இந்த குண்டுவெடிப்பு காரணமாக பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் 35 பேர் படுகாயமடைந்துள்ளனர், அவர்களில் 7 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவ இடத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் யாரும் குண்டுவெடிப்பு ஏற்பட்ட இடத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. மேலும் வெடித்த பொருள் என்ன என்று தீவிர சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் குண்டுவெடிப்பின் போது சம்பவ இடத்தல் இருந்தவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார். மேலும் குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பயங்கரவாத தாக்குதல் காரணமாக இருக்குமோ என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. வெடிகுண்டு தடுப்பு பிரிவு மற்றும் தடயவியல் குழுவினர் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தி வருகின்றனர். குண்டுவெடிப்பு காரணமாக கேரளா முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.