இந்தியாவில் இருந்து தப்பியோடிய நித்தியானந்தா, கைலாசா என்ற நாட்டை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளார். இதற்கிடையே, கைசாலா அமெரிக்காவில் பல நகரங்களை ஏமாற்றி போலியான ஒப்பந்தங்களைப் போட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஜெனிவாவில் கடந்த மாதம் 24ஆம் தேதி ஐ.நா அமைப்பின் பொருளாதார, சமூக, மற்றும் கலாச்சார உரிமைகள் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் ‘கைலாசா குடியரசு’ சார்பில் நித்தியானந்தாவின் பிரதிநிதிகளாகப் பெண்கள் சிலர் கலந்துகொண்டனர். இந்த புகைப்படங்கள் நித்தியானந்தாவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி வைரலாகின. இதைப் பயன்படுத்தி கைலாசாவை ஐ.நா. அங்கீகரித்தது போல் தோற்றத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது.
மேலும், சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவின் நேவார்க் நகரம் கைலாசா நாட்டுடன் சிஸ்டர் சிட்டி ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது. இது கைலாசாவுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் என்றே நித்தியானந்தாவின் ஆதரவாளர்கள் கூறி வந்தனர். ஆனால் கைலாசா தொடர்பான சர்ச்சைகளை அறிந்தவுடன் அந்த ஒப்பந்தத்தை நேவார்க் நகரம் சமீபத்தில் ரத்து செய்துவிட்டது. இதேபோல் அமெரிக்காவின் புளோரிடா உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நகரங்கள் கலாச்சார கூட்டாண்மை ஒப்பந்தம் செய்திருப்பதாகச் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் வரும் நாட்களில் மேலும் சில பகீர் தகவல்கள் வெளியாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.