கர்நாடக மாநிலம் பெலகாவி பகுதியில் இளம் பெண் ஒருவருக்கு டிசம்பர் 5ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடக்கவிருந்தது. ஆனால் ஆதற்கு முன்னதாக டிசம்பர் 4ஆம் தேதியே அந்த இளம்பெண் தனது காதலுடன் வீட்டை விட்டு வெளியேறினர். இதனை தொடர்ந்து, ஒரு கும்பல், அந்த இளைஞனின் வீட்டிற்கு கடந்த டிசம்பர் 11ஆம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு சென்று அந்த இளைஞனின் தாயாரை வீட்டிற்கு வெளியே இழுத்து வந்து ஆடையை அவிழ்ந்து அரை நிர்வாணமாக கம்பத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் வீடியோ வாயிலாக வெளியில் தெரிந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 8 பேர் அடையாளம் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரித்து வருகிறது. இந்த வழக்கு விசாரணை இன்று தலைமை நீதிபதி பிரசன்னா பி வரலே மற்றும் நீதிபதி கிருஷ்ணா எஸ் தீட்சித் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்னர் விசாரணை நடைபெற்ற போது, இந்த சம்பவம் தொடர்பாக கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
இன்றைய உலகில், துரியோதனன்கள் வந்து பெண்ணின் ஆடையை இழுத்தால் எந்த கிருஷ்ண பகவானும் வந்து உதவ மாட்டார்கள் என்று உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு தெரிவித்தது. எங்களிடம் பேசுவதற்கு வார்த்தைகளே இல்லை. அந்தப் பெண்மணி இரண்டு மணிநேரம், ஆடைகள் அகற்றப்பட்டு, கம்பத்தில் கட்டப்பட்டு ஒரு மிருகத்தை போல தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை தருகிறது. அவர்களை மனிதர்கள் என்று சொல்ல வெட்கமாக இருக்கிறது. விலங்குகள் கூட தங்கள் இனத்தில் இவ்வாறு நடந்து கொள்ளாது என்று தலைமை நீதிபதி கூறினார்.
மேலும், சுதந்திரத்திற்குப் பிறகு இப்படி ஒரு சம்பவம் என்பது இந்திய அரசியலமைப்புக்கு துரதிர்ஷ்டவசமான ஒன்று. சட்டத்திற்கு பயப்பட வேண்டியதில்லை என்ற நினைப்பு வருவது ஒரு வருந்தத்தக்க நிகழ்வு. இந்த சம்பவம் குறித்த முழு அறிக்கையை கர்நாடக போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.