எங்கிருந்து வேண்டுமானாலும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க தமிழ்நிலம் என்ற இணையதளத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
வருவாய்த்துறையானது மாநிலத்தின் சீரான சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கும், சாமானிய மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் முக்கிய பங்காற்றுகிறது. அரசின் பல்வேறு சமூகப் பொருளாதாரத் திட்டங்கள் இத்துறையின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் வீடு மனை வாங்குவோர் அதற்கான பட்டாவில் பெயர் மாற்ற வேண்டும். பட்டா பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பித்தால் தாலுகா அலுவலகங்களில் அதற்கான பணிகள் முறையாக நடப்பதில்லை.
இந்த பிரச்னைக்கு தீர்வாக பத்திரப்பதிவு அடிப்படையில் தானியங்கி முறையில் பட்டாவில் பெயர் மாற்றும் திட்டம் 2019-ல் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அநத திட்டம் சரியாக நடைமுறைப்படுத்தவில்லை. வருவாய்த் துறையின் மூலமாக 25-க்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் வழங்குவதில் மாவட்ட அளவிலான செயல்திறன் குறித்தும், எங்கு அதிகமாக பணிகள் நிலுவையில் இருக்கிறது என்பது குறித்தும், அவற்றை எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் களைவதற்கான வழிவகைகள் குறித்தும், மக்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்களின் நடைமுறையை மாற்றி அமைத்து அதை எளிதாக அவர்களுக்கு வழங்க வேண்டிய வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும் என சமீபத்தில் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் வருவாய் துறை சார்பில் இணையவழியில் மூலமாக பொதுமக்கள் எங்கிருந்தும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதியை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.. இதன் மூலம் tamilnilam.tngov.in/citizen என்ற இணையதளத்தில் பெயர், செல்போன் எண், இமெயில் முகவரியுடன் பட்டா மாறுதலுக்கு இனி ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்.. பட்டா மாறுதலுக்கான உட்பிரிவு, செயலாக்க கட்டணங்களை இணைய வழியிலேயே செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..
கட்டணங்கள் செலுத்தப்பட்டதும் நில அளவர் மற்றும் கிராம நிர்வாக அலுவரின் நடவடிக்கைக்கு விண்ணப்பங்கள் பட்டியலிடப்படும்.. தமிழக அரசின் இந்த நடவடிக்கையால், பட்டா மாறுதலுக்கு வட்டாட்சியர் அலுவலகம் அல்லது பொது இ சேவை மையத்திற்கு செல்ல வேண்டியதில்லை.. பட்டா மாறுதல் அங்கீகரிக்கப்பட்ட பின் உத்தரவின் நகல், பட்டா, புலப்படச்சுவடியை எங்கிருந்து வேண்டுமானாலும் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்..