தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்திற்கு சென்று அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். அந்த வகையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணாவின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அப்போது அங்கிருந்து புறப்பட்டபோது அண்ணாவின் நினைவிடத்திற்கு சசிகலா வருகை தந்தார். அப்போது காரில் இருந்து இறங்கி இருவரும் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசிக்கொண்டனர். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தபோது பதிலளித்த சசிகலா, “ஒருவர் எதிரில் வரும்போது பார்த்து பேசுவது என்பது தமிழ்நாட்டின் பண்பு. அதன்படி பார்த்து பேசினேன். அவர் எங்கள் கட்சிக்காரர். அவர் குடும்பத்தில் ஒருவர். அனைவரும் அதிமுகவை சேர்ந்தவர்கள் தான் என நான் ஆரம்பத்தில் இருந்தே சொல்லிக் கொண்டிருக்கிறேன்” என்றார்.