கடலூர் மாநகராட்சியில் குப்பைகளை அகற்றுதல், கால்வாய் சுத்தம் செய்தல், தெருவிளக்கு எரிய வைத்தல், சாலை பராமரிப்பு, சாக்கடை சுத்தம் செய்தல், வரி செலுத்துதல் உள்ளிட்ட சேவைகளைப் பெற பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகம் வந்து புகார் தெரிவிக்க வேண்டியிருக்கும். ஆனால், தற்போது அந்த சிரமங்களை குறைக்கும் வகையில், கியூஆர் கோடு எனும் அட்டை அனைத்து வீடுகளிலும் ஒட்டப்பட உள்ளது.
கடலூர் மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் உள்ள அனைத்து வீடுகளிலும் கியூஆர் கோடு அட்டை ஒட்டும் பணி தொடங்கப்பட உள்ளது. கடலூர் மாநகராட்சி முழுவதும் 33,000 கியூஆர் கோடு அட்டை ஒட்டும் பணியினை கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா தொடங்கி வைத்தார். தூய்மை இந்தியா திட்ட பணியாளர்களைக் கொண்டு இப்பணி செயல்படுத்தப்பட உள்ளது.
தங்கள் வீட்டில் இருந்தபடியே இந்த கியூஆர் கோடு அட்டைகளை பயன்படுத்தி, பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவித்து மாநகராட்சியின் அனைத்து சேவைகளையும் பெறலாம் என மாநகராட்சி மேயர் தெரிவித்துள்ளார்.