முன்னாள் கிரிக்கெட் வீரரான கபில்தேவ் இந்திய அணியின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்திருந்தார். “ ஐபிஎல் போன்ற தொடர்களில் விளையாடுவதன் மூலம் இந்திய வீரர்கள் அதிக பணத்தை சம்பாதிக்கிறார்கள். பணம் வரும்பொழுது ஈகோவும், திமிரும் சேர்ந்து வருகிறது. தங்களுக்கு எல்லாமே தெரியும் என்று இந்திய அணியின் வீரர்கள் நினைக்கிறார்கள். ஐபிஎல் தொடருக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை, இந்திய அணிக்காக அளிக்க வேண்டும். சுனில் கவாஸ்கர் மாதிரியான ஜாம்பவான்களிடம் யாரும் ஆலோசனை கேட்பதில்லை” என்று விமர்சித்திருந்தார்.
இதுகுறித்து இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டரான ஜடேஜாவிடம் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த ஜடேஜா, அவர் எப்போது இப்படி சொன்னார் என்று தெரியவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கும். ஒரு முன்னாள் வீரராக கபில் தேவ் அவரின் கருத்துக்களைச் சொல்வதற்கு உரிமை இருக்கிறது.
ஆனால் கபில் தேவ் கூறுவதுபோல இந்திய வீரர்கள் யாரிடமும் ஈகோவோ, ஆணவமோ இல்லை. எல்லோருமே கடினமாக உழைக்கிறோம். எல்லோரும் தங்களின் 100 சதவிகிதத்தைக் களத்தில் கொடுக்கிறோம். இந்திய அணி தோல்வியடையும்போது இதுபோன்ற கருத்துகள் வரும். இந்தியாவிற்காக விளையாடுவதுதான் எங்களின் நோக்கம் என்று தெரிவித்திருக்கிறார்