உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில், வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது. நேற்று கூட உளவு செயற்கைக்கோளை வடகொரியா ஏவிய நிலையில், சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி தோல்வி அடைந்தது. 1980-களுக்குப் பிறகு முதல் முறையாக, தென் கொரியாவுக்கு அணு ஆயுதம் கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலை அமெரிக்கா அனுப்பியது.
அமெரிக்கா-தென் கொரியா நாடுகள் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபடுவதற்கு வடகொரியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் தான், அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தப்படுகிறது. கடந்த மே மாதம் ராணுவ உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய நிலையில், அது கடலில் விழுந்து தோல்வியில் முடிந்தது. தற்போது தனது முதல் இராணுவ உளவு செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் வைக்க வடகொரியா முயன்று வருகிறது. அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரிய துருப்புக்களின் நகர்வுகளை கண்காணிப்பதற்காக இத்திட்டத்தை செயல்படுத்த வடகொரியா முயற்சித்து வருகிறது.
இந்நிலையில், உளவு செயற்கைக்கோளை மீண்டும் விண்ணில் ஏவ வடகொரியா திட்டமிட்டுள்ளது. வட கொரியாவின் தேசிய விண்வெளி மேம்பாட்டு நிர்வாகம் தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து சரி செய்ய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளது. மேலும், ராக்கெட் அமைப்பின் ஒட்டுமொத்த நம்பகத்தன்மையின் அடிப்படையில் இது “பெரிய பிரச்சனை இல்லை என்று கூறியுள்ளதாக வடகொரிய அரசின் ஊடகம் KCNA செய்தி வெளியிட்டுள்ளது.
தோல்விக்கான காரணத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுத்த பிறகு 3-வது உளவு செயற்கைக்கோள் ஏவுதலை அக்டோபரில் நடத்துவோம் என்ற நிலைப்பாட்டை வட கொரியாவின் தேசிய விண்வெளி மேம்பாட்டு நிர்வாகம் வெளிப்படுத்தியது என்று KCNA தெரிவித்துள்ளது. இந்நிலையில், வட கொரியாவின் சோஹே செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டதில் இருந்து கண்காணித்ததாகவும், அது தோல்வியடைந்துள்ளதாகவும் தென் கொரியா ராணுவமும் தெரிவித்துள்ளது.