தமிழ்நாட்டிற்கு ஆண்டு தோறும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை காலம் ஆகும். இந்த பருவமழையின் மூலமே தமிழ்நாடு அதிகளவில் மழையை பெரும். இந்நிலையில், தென் மேற்கு பருவமழை முற்றிலுமாக முடிவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் கடந்தாண்டை விட 8% அதிகமாக தமிழ்நாடு மழையை பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வரும் 23ஆம் தேதி மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கன்னியாகுமரி மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகின்றது. இதனால், வடகிழக்கு பருவமழை நாளை தமிழகத்தில் தொடங்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் வடகிழக்கு பருவமழை இன்றே தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் தமிழ்நாட்டில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு நிலை, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என கணிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.