2022-2023ஆம் கல்வி ஆண்டில் பள்ளி செல்லாக் குழந்தைகளை கண்டறிய வேண்டும் என ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை விடுத்துள்ளது.
2022-2023ஆம் கல்வியாண்டில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளியில் இடைநின்ற மாணவர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும் என ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்க அனுப்பியுள்ளது. 100 சதவீத மாணவர் சேர்க்கையை உறுதி செய்யும் விதமாக ஆண்டு தோறும் பள்ளிகளில் இருந்து இடைநிற்கும் மாணவர்களின் விவரங்களை சேகரித்து அவர்களை மீண்டும்
பள்ளிகள் அல்லது சிறப்பு வகுப்பில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 2022-2023ஆம் கல்வியாண்டில் பள்ளிக்குச் செல்லா அல்லது இடை நின்ற குழந்தைகளை கண்டறிந்து அவர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும் எனவும் விவரங்களின் அடிப்படையில் குழந்தைகளின் வீட்டிற்கே சென்று அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க களப்பணி ஆற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் 19ஆம் தேதி முதல், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் மூலமாக குழுக்கள் அமைத்து விவரங்களை சேகரிக்க வேண்டும்
எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 19.12.2022 முதல் 11.01.2023 வரை கணக்கெடுப்பு களப்பணி மேற்கொள்ள வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னறிவிப்பின்றி தொடர்ந்து 30 நாட்கள் பள்ளிக்கு வராத குழந்தைகள், அதிகமாக விடுமுறை எடுத்து பள்ளியில் இருந்து இடை நின்ற குழந்தைகள் ஆகியோர் பள்ளி செல்லாக் குழந்தைகளாக கருதப்படுவர்.