10-ம் வகுப்பு விருப்பப் பாடத்திற்கு தேர்ச்சி மதிப்பெண்னை 35 % ஆக நிர்ணயித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வி துறை செயலர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ள அரசாணையில்; நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் பகுதி 4-ல் விருப்ப மொழி பாடத் தேர்வில் மாணவர்கள் பெறும்மதிப்பெண்கள் தேர்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்படும். மேலும், பிற பாடங்கள்போல இதற்கும் தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண் (‘பாஸ் மார்க்’) 35 சதவீதம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மொத்தம் 6 பாடங்களில் பெறும் மதிப்பெண்கள், அவர்களது சான்றிதழில் குறிப்பிடப்படும். இந்த நடைமுறை வரும் 2024-25-ம் கல்வி ஆண்டில் இருந்து அமலுக்கு வரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் விருப்ப மொழி பாடத்தை தேர்வு செய்தவர்களுக்கு மொத்த மதிப்பெண் 600 என்றும், தேர்வு செய்யாதவர்களுக்கு வழக்கம்போல 500 மதிப்பெண்ணும் கணக்கிடப்ப்படும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.