மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞருக்கு இன்று 100வது பிறந்தநாள். திரைப்படத்துறை மற்றும் அரசியலில் கோலோச்சி நின்ற அவரது சாதனைகளில் சிலவற்றை ஓர் சிறப்பு தொகுப்பாக பார்க்கலாம்.
முத்தமிழறிஞரின் அனல்பறக்கும் வசனத்தில் உருவான பராசக்தி திரைப்படம் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது. 1950களில் தொடங்கிய கலைஞரின் கலைப்பயணம் 50 ஆண்டுகளாக நீடித்தது. எம்.ஜி.ஆர்., சிவாஜி உள்ளிட்ட முன்னனி நடிகர்களின் நடிப்பும் கலைஞரின் வசனங்களும் பட்டிதொட்டியெங்கும் பேசப்பட்டது. மறக்க முடியுமா, மனோகரா, அரசிளங்குமரி, ரங்கோன் ராதா உள்ளிட்ட படங்களில் கலைஞர் எழுதிய மிரட்டலான வசனங்கள் தமிழ் திரைப்பட ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்டவை.
”உயிரினும் மேலான உடன்பிறப்பே” தன்னுடைய கணீர் குரலால் லட்சக்கணக்கான தொண்டர்களை தன்வசப்படுத்தியவர் கலைஞர். பெரியார், அண்ணா ஆகியோரின் பெயர்களை வாழ்நாள் முழுவதும் உச்சரித்து வந்த அவர், 50 ஆண்டுகளுக்கு மேலாக கட்சி தொண்டர்களை பகுத்தறிவு, சமூகநீதி, திராவிடம் போன்ற கொள்கைகளில் சமரசமின்றி வழிநடத்திச்சென்றார். இந்தி திணிப்பு எதிர்ப்பு, மாநில சுயாட்சி, பெண்களுக்கு சம உரிமை, சாதி பாகுப்பாடு ஒழிப்பு போன்ற திராவிட கொள்கைகளில் வாழ்நாள் முழுவதும் உறுதியாக இருந்தவர். அரசியல் ரீதியாக கலைஞரை கடுமையாக எதிர்த்த அவருடைய தமிழ்பற்றையும், நினைவாற்றலையும், பெருமையுடன் குறிப்பிட தவறியதே இல்லை. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்க்கு கிடைக்க முக்கிய காரணமாக இருந்தவர் கலைஞர் தான்.
திரைத்துறை, இலக்கியம், இதழியல் என பன்முக வித்தகரராக திகழ்ந்த கலைஞர் முத்தமிழறிஞராக போற்றப்பட்டார். இலக்கணம், இலக்கியம், வரலாறு ஆகியவற்றில் ஏராளமான நூல்களை எழுதிய அவர், தமது உடன்பிறப்புகளுக்காக ஆயிரக்கணக்கான கட்டுரைகள் மற்றும் கடிதங்களை எழுதியுள்ளார். 62 ஆண்டுகள் சட்டமன்ற பணி 50 ஆண்டுகள் கட்சித்தலைவர் பணி, 5 முறை முதலமைச்சர், 13முறை சட்டமன்ற உறுப்பினராக தொடர்ந்த கலைஞரின் சாதனைகள் எண்ணிடலங்காதவை.
நாடகம், இலக்கியம், ஊடகம், சின்னத்திரை, அரசியல் களம் என அவர் கால்பதிக்காத துறைகளே இல்லை. தமிழக அரசியல் வரலாற்றில் தனது பேராற்றலாலும் பெரும் பணிகளாலும் அயராத உழைப்பினாலும் ஆற்றல் மிக்க படைப்புகளாலும் தனி முத்திரையை படைத்தவர் முத்தமிழறிஞர் கருணாநிதி. முதலமைச்சராக பதவி வகித்தப்போது பல்வேறு தொழிற்சாலைகளை கொண்டுவர பாடுபட்டார். விவசாயம், கல்வி, சமூக நலம், மகளிர் மேம்பாடு, தாழ்த்தப்பட்டோர் மேம்பாடு அடைய இடைவிடா முயற்சிகளை மேற்கொண்டார்.
உடல்நலப்பாதிப்பு, முதுமை காரணமாக தீவிர அரசியலில் இருந்து சில காலம் விலகியிருந்த கலைஞர், 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி காலமானார். 70 ஆண்டுகளுக்கு மேலாக பொதுவாழ்வில் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட கலைஞரை, கட்சித்தொண்டர்களும், பொதுமக்களும் மரியாதையுடன் நினைவு கூர்கின்றனர். அரசியல் ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும், கலைஞர் விட்டுச்சென்ற சுவடுகள் காலத்தால் அழியாதவை என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.