கோவை மாவட்டம் வேடப்பட்டி நம்பியழகம் பாளையம் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் ஜெகன்ராஜ் (33). இவரது நண்பரான மதன்ராஜ்(32) என்பவருக்கும் ஜெகன்ராஜ் அக்காவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனால், ஜெகன்ராஜுக்கும் மதன்ராஜுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், ஜெகன்ராஜ் குடிபோதையில் மதன்ராஜ் வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, ஆத்திரமடைந்த மதன்ராஜ் வீட்டில் இருந்த கட்டையை எடுத்து ஜெகன்ராஜை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், ஆத்திரம் அடங்காததால் ஜெகன்ராஜை கத்தியை எடுத்து சரமாரியாக குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து ஜெகன்ராஜ் உயிரிழந்தார்.
இதையடுத்து, கொலை மறைப்பதற்காக ஒரு ஆட்டோவை ஏற்பாடு செய்து அதில் ஜெகன்ராஜின் உடலை ஏற்றிக் கொண்டு வீரகேரளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை பின்புறம் இருக்கும் மயானத்துக்கு சென்றார். ஆனால், அங்கு பொதுமக்கள் இருந்ததால், அவர்களிடம் மதன்ராஜ் சிக்கிக் கொண்டார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் ஜெகன்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக மதன்ராஜிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.