2024-ம் ஆண்டில் ஒரே நாடு, ஒரே தேர்தல் வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அமைச்சர் எல்.முருகன் மீண்டும் ராஜ்ய சபா உறுப்பினராக போட்டியிடுகிறார் என பா.ஜ.க. அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம், தமிழகம் என அவரது பணி சிறக்கட்டும். அவரது வேலை இன்னும் மக்களுக்கு சென்று சேரட்டும்.
மத்திய அமைச்சர் எல்.முருகனிடம் நீலகிரியில் போட்டியிட நாங்கள் சொல்லவில்லை. நீலகிரி தொகுதியை தயார்படுத்தி தர அவரிடம் சொல்லி இருந்தோம். நீலகிரியில் போட்டியிட வேட்பாளர் தயாராக உள்ளார். தமிழகத்தில் எல்லா தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள். கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து சரியான நேரத்தில் முடிவு எடுக்கப்படும். 2024-ம் ஆண்டு ஒரே நாடு, ஒரே தேர்தல் வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு. கோவை குண்டு வெடிப்பு கைதிகள் 16 பேரை விடுவிக்க தி.மு.க. கங்கணம் கட்டிக் கொண்டுள்ளது. அக்குற்றவாளிகளை எந்த காரணத்திற்காகவும் விடுவிக்க கூடாது. கோவை இன்னும் அபாயத்தில் இருந்து தப்பிக்கவில்லை.