உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்பு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பிரிட்டனை ஏவுகணை மூலம் தாக்கப் போவதாக மிரட்டியதாக இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.
பிபிசி நிறுவனம் “Putin Vs the West” என்ற புதிய ஆவணப்படத்தை தயாரித்துள்ளது.. விளாடிமிர் புடின் – போரிஸ் ஜான்சன் இடையே நடந்த நீண்ட தொலைபேசி உரையாடலின் விவரங்களை அந்த ஆவணப்படம் வெளிப்படுத்தி உள்ளது.. மேலும் அது உலகத் தலைவர்களுடனான புதினின் தொடர்புகளையும் ஆராயும் வகையில் அமைந்துள்ளது… கடந்த ஆண்டு பிப்ரவரி 24 அன்று ரஷ்யா உக்ரைன் மீது முழு அளவிலான தாக்குதலை தொடங்குவதற்கு, சில நாட்களுக்கு முன்பு, இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் புடின் தொலைபேசியில் பேசினார் என்று அந்த ஆவணப்படம் கூறுகிறது….

உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்பு, இங்கிலாந்து பிரதமர் புடினை எச்சரித்ததையும் ஆவணப்படம் வெளிப்படுத்துகிறது.. அந்த ஆவணப்படத்தில் பேசிய போரிஸ் ஜான்சன் “ இது (உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவது) மேற்கத்திய பொருளாதாரத் தடைகளுக்கு வழிவகுக்கும் என்றும், ரஷ்யாவின் எல்லைகளில் நேட்டோ படைகள் அதிகமாக இருக்கும் என்றும் கூறினேன்… உக்ரைன் எதிர்காலத்தில் நேட்டோவில் சேராது என்று புடினிடம் கூறி ரஷ்யாவின் போரை தடுக்கவும் நான் முயற்சி செய்தேன்..
இருப்பினும், புடின் அதனை நம்பவில்லை.. புடின் ஒரு கட்டத்தில் என்னை மிரட்டினார்.. ‘போரிஸ், நான் உன்னை காயப்படுத்த விரும்பவில்லை, ஆனால், ஒரு ஏவுகணை மூலம், ஒரு நிமிடத்தில் என்னால் பிரிட்டனை தாக்க முடியும்..” என்று புடின் தெரிவித்தார்..
மேலும் உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமிக்காது என்று புடின் உறுதியளித்ததையும், ஆனால் புடின் கூறுவது பொய் என்று போரிஸ் ஜான்சனுக்கு தெரியும் எனவும் அந்த ஆவணப்படம் வெளிப்படுத்துகிறது… புடின் இதுகுறித்து பேசிய போது, “வலிமையின் நிரூபணம்” என்று புடின் அதை விவரித்தார், அதாவது: நான் உங்களிடம் பொய் சொல்லப் போகிறேன், நான் பொய் சொல்கிறேன் என்று உங்களுக்குத் தெரியும், நான் இன்னும் உங்களிடம் பொய் சொல்லப் போகிறேன்..” புடின் போரிஸ் ஜான்சனிடம் கூறியுள்ளார்..
இந்த தொலைபேசி உரையாடல் நடந்த 15 நாட்களுக்குள் பிப்ரவரி 24 அன்று ரஷ்ய படைகள் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த தொடங்கிய போது, இங்கிலாந்து பிரதமருக்கு நள்ளிரவில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது என்று ஆவணப்படம் கூறுகிறது. “ஜெலன்ஸ்கி அமைதியாக இருந்தார்.. உங்களுக்குத் தெரியும், அவர்கள் (ரஷ்யா) எல்லா இடங்களிலும் தாக்குகிறார்கள்,” என்று அவர் கூறினார். உக்ரைன் அதிபரை பாதுகாப்பாக இருக்க வேறு நாட்டிற்கு செல்ல நான் அறிவுறுத்தினேன்.. இருப்பினும், அவர் தனது நாட்டை விட்டு வெளியேற மறுத்துவிட்டார்..” என்று போரிஸ் தெரிவித்துள்ளார்..