ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த தம்பதியின் ஒன்றரை வயது மகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சி வைக்கப்பட்டிருந்த மேஜையில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. குழந்தை உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த குழந்தை மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் குழந்தை மூளைச்சாவு அடைந்த நிலையில், டாக்டர் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில், குழந்தை உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு எனத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, குழந்தையின் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். இதயம், சிறுநீரகம், கல்லீரல் ஆகியவை தானமாகப் பெறப்பட்டு, பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குப் பொருத்தப்பட்டன.
குறிப்பாக, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நான்கு மாத பெண் குழந்தைக்கு கல்லீரலும், வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 19 வயது சிறுமிக்கு சிறுநீரகங்களும் பொருத்தப்பட்டன. இந்த குழந்தைதான் மாநிலத்திலேயே மிகக் குறைந்த வயதில் உறுப்பு தானம் செய்தவர்.
தமிழகத்தில் கடந்த 2010ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை 52 குழந்தைகள் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர். தற்போது 103 குழந்தைகள் இதயம், சிறுநீரகம், கல்லீரல் என பல்வேறு உறுப்புகளுக்காக காத்திருக்கின்றனர்.