மேற்கு வங்கத்தில் தன்னுடைய கள்ளக்காதலன் கைவிட்டதன் காரணமாக, விரக்தி அடைந்த பெண், கள்ளக்காதலன் வீட்டின் முன்பே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கல்கத்தாவில் குடும்பப் பிரச்சனையின் காரணமாக, சுபீர் பிஸ்வாஸ் என்பவர் தன்னுடைய மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.அதேபகுதியில், கணவனை இழந்த விதவை பெண் ஒருவர் தன்னுடைய குழந்தைகளோடு வசித்து வந்தார்.
இவர்களுக்கு இடையில் முதலில் நட்பு ஏற்பட்டு பழகி வந்தனர். அதன் பிறகு இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகமாகி, கள்ளக்காதலர்களாக மாறினர். அதன் அடிப்படையில், அடிக்கடி அந்த விதவை பெண்ணின் வீட்டிற்கு பிஸ்வாஸ் சென்று வந்துள்ளார். மேலும் அவருடன் அடிக்கடி உல்லாசமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
கணவனை இழந்த பெண் என்பதால், அவர் பிஸ்வாஸை தன்னுடைய காதலனாக மட்டுமல்லாமல், இரண்டாவது கணவராகவும் நினைத்து பழகி இருந்தார். ஆனால் பிஸ்வாஸ் அப்படி நினைக்கவில்லை. அவருடன் உல்லாசமாக இருந்தால் மட்டும் போதும் என்று அவர் நினைத்துள்ளார்.
பலமுறை அந்த பெண்மணி, நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று பிஸ்வாசிடம் கூறியுள்ளார். ஆனாலும், அதற்கு பிஸ்வாஸ் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில், பிஸ்வாஸ் தன்னை ஏமாற்றுகிறார் என்பதை அறிந்து கொண்ட அந்த பெண்மணி, கையில் மண்ணெண்ணெய் கேனுடன், தன்னுடைய குழந்தைகளை அழைத்துக் கொண்டு, பிஸ்வாஸ் வீட்டிற்கே சென்று விட்டார்.
அந்தப் பெண்மணியை கண்ட பிஸ்வாஸ் உடனடியாக அங்கிருந்து கிளம்புமாறு தெரிவித்துள்ளார். ஆனாலும் அதற்கு மறுப்பு தெரிவித்த அந்த விதவை பெண்மணி, அங்கேயே இருந்துள்ளார். அதன் பிறகு இப்போது நீ இங்கிருந்து செல்லவில்லை என்றால், நாம் தனியாக இருக்கும்போது எடுத்த அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று தெரிவித்து மிரட்டியுள்ளார் பிஸ்வாஸ்.
இதன் காரணமாக, விரக்தி அடைந்த அந்த பெண்மணி, வீட்டில் இருந்து கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து தன்மீது ஊற்றி, தீ வைத்துக் கொண்டார். வலியால், கதறி துடித்த அந்த பெண்ணை, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில், அந்த பெண்மணி பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது அவருடைய இரண்டு குழந்தைகளும் ஆதரவின்றி நிற்கின்றனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அவருடைய தற்கொலைக்கு காரணமாக இருந்த பிஸ்வாஸை மிக தீவிரமாக தேடி வருகிறார்கள்.