முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாஜகவில் இணைகிறாரா? என்ற கேள்விக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்த பதில்தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அதிமுகவில் 2 முறை தர்மயுத்தம் நடத்திப் பார்த்தும் தோல்வியைத் தழுவிவிட்டார் ஓ.பன்னீர்செல்வம். அதிமுக இப்போது எடப்பாடி பழனிசாமி வசமாகிவிட்டது. அதிமுக பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றிய எடப்பாடி பழனிசாமி கட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். ஆனாலும், இன்னமும் ஏதோ சில நம்பிக்கைகளில் அதிமுக நானே, அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகவில்லை எனக்கூறி வருகிறார் ஓபிஎஸ். அண்மையில் ஓபிஎஸ் அணி நடத்திய திருச்சி மாநாடும் கூட பெரிய பரபரப்பை கிளப்பாமலே போனது.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையிலான அக்கட்சி மூத்த தலைவர்கள் குழு, டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தது. அப்போது, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் உடனிருந்தனர். இச்சந்திப்பின் போது லோக்சபா தேர்தலுக்கான அதிமுக – பாஜக கூட்டணி உறுதிப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தமிழ்நாடு பாஜகவினரோ 25 சீட் கொடுத்தால்தான் அதிமுகவுடன் கூட்டணி என திடீரென பேச தொடங்கி உள்ளனர். இதற்கு அதிமுக தரப்பில் இருந்தும் பதிலடி தரப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் களத்தில் பிசியாக இருக்கும் அண்ணாமலையிடம், அதிமுக குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்போது, எடப்பாடி பழனிசாமிக்கும் தமக்கும் எந்த பிரச்சனையுமே இல்லை என திட்டவட்டமாக கூறினார். அதேநேரத்தில் பாஜகவில் ஓபிஎஸ் இணைவாரா? என்கிற கேள்வியும் கேட்கப்பட்டது. இதற்கு, பொறுத்திருந்து பாருங்கள் என ஒரு வரியில் மட்டும் பட்டும் படாமல் அண்ணாமலை பதில் கூறியிருக்கிறார். அப்படியானால் அண்ணாமலை சொல்வதைப் போலத்தான் எதிர்காலத்தில் நடக்குமா? என்கிற கேள்விதான் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.