சென்னை ராயப்பேட்டை காவல்நிலையத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது சி.வி. சண்முகம் எம்.பி புகார் அளித்துள்ளார்..
ஜூலை 11ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். இந்த வன்முறை சம்பவத்தை அடுத்து, கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவ்வழக்கில், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அதிமுக அலுவலகத்தின் சாவியை உடனடியாக ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், கட்சி தொண்டர்களை ஒரு மாத காலத்திற்கு அங்கு அனுமதிக்கக் கூடாது எனவும் அறிவுறுத்திய நீதிபதி, அலுவலகத்திற்கு தேவையான போதுமான பாதுகாப்பை காவல்துறை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
இதையடுத்து அதிமுக அலுவலகம் மீண்டும் திறக்கப்பட்டது.. மேலும் இபிஎஸ் தரப்பினர் அதிமுக அலுவலகத்திற்குள் சென்று பார்வையிட்டனர்.. அப்போது ஜெயலலிதாவுக்கு பரிசாக கொடுக்கப்பட்ட பல பொருட்களை காணவில்லை என்று குற்றம்சாட்டி இருந்தனர்..
இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை காவல்நிலையத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது சி.வி. சண்முகம் எம்.பி புகார் அளித்துள்ளார்.. கடந்த 11-ம் தேதி ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கட்சி அலுவலகத்திற்கு நுழைந்து சூறையாடினர்.. அதிமுக அலுவலகத்தின் அசல் பத்திரங்களை காணவில்லை என்று அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.. மேலும் கோவை, திருச்சி, புதுச்சேரி உள்ளிட்ட அதிமுக அலுவலக பத்திரங்களை காணவில்லை என்றும் அண்ணா சாலையில் உள்ள சபையர் தியேட்டரின் அசல் பத்திரத்தை காணவில்லை என்று சி.வி சண்முகம் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்..
இதுதவிர அதிமுகவுக்கு சொந்தமான மொத்தம் 37 மோட்டார் வாகனங்களில் அசல் பதிவு சான்றிதழ்களையும் காணவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.. பீரோலில் வைக்கப்பட்டிருந்த ரூ.31,000 ரொக்கப்பணம், 2 வெண்கல குத்துவிளக்கு ஒரு குத்து விளக்கையும் காணவில்லை என்றும் புகாரில் தெரிவித்துள்ளார்..