காதல் ஒவ்வொரு வாழ்விலும் மறக்க முடியாத ஒரு நிகழ்வு. காதலிக்கும் போது நடந்த சுவாரசியமான சம்பவங்களையும் மலரும் நினைவுகளையும் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான நினைவுகளாக அவற்றை சேமித்து வைத்திருப்பார்கள். தற்போது பாகிஸ்தான் நாட்டைச் சார்ந்த இளம் தம்பதியர் தங்களது காதலின் மலரும் நினைவுகளை வித்தியாசமான முறையில் நினைவுகளாக சேமித்து வைத்திருக்கும் சம்பவம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி இருக்கிறது. பாகிஸ்தான் நாட்டின் தலைநகரான இஸ்லாமாபாத்தை சார்ந்த தம்பதிகள் அஃபான் மற்றும் சைரத். இவர்கள் இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது அஃபான் தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.
அதில் அவரும் அவரது மனைவியும் நண்பர்களாக பழகத் துவங்கியதிலிருந்து காதலர்கள் ஆனவரை பகிர்ந்து கொண்ட மறக்க முடியாத குறுஞ்செய்திகளை இருவரும் தங்கள் கைகளில் பச்சை குத்தி இருக்கும் புகைப்படம் தான் அது. மேலும் அந்த குறுஞ்செய்திகள் உடன் தொடர்புடைய ஸ்கிரீன் ஷாட்களையும் பகிர்ந்து இருக்கிறார். எங்கள் வாழ்க்கை இங்கு தொடங்கியது இவ்வாறு போய்க் கொண்டிருக்கிறது என்ற வாசகத்துடன் அந்தப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார். இவை தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கின்றன. காதலர்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் பரஸ்பரமான அன்பினை பறைசாற்றும் விதமாக இந்த புகைப்படங்கள் அமைந்திருப்பதாக நிட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்