தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இதை தடுக்க தமிழக அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசு மருத்துவமனைகள், திரையரங்குகளில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, மஞ்சள் காமாலை நோய் பரவல் வேகம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நோயால் குழந்தைகள் தான் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் வார்டில் பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், தனியார் மருத்துவமனைகளில் 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் சேர்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. தற்போது கொரோனா மற்றும் குழந்தைகளை தாக்கும் இன்புளுயன்சா வைரஸ் அதிகரிக்கும் நிலையில், மஞ்சள் காமாலை நோயும் பரவுவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, சுகாதாரமற்ற நீர் மற்றும் உணவுகளை அருந்துவதால் மஞ்சள் காமாலை நோய் பரவுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணெய் மற்றும் கார உணவுகளை அது அறவே தடுக்க வேண்டும். கொதிக்க வைத்து ஆற வைத்த நீரை மட்டுமே பருக வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.