விழுப்புரம் அருகே வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவியிடம் நூதன முறையில் பேசி நகை, பணத்தை கொள்ளையடித்த நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் அசோகபுரி கிராமத்தை சேர்ந்தவர் பிரபு (40). இவர் கட்டிட மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கட்டிடப் பணிக்கு சித்தாள் வேலையாக உடன் சென்று வருவார். இவருடைய மகன் நவீன்ராஜ் (16) தும்பூரில் உள்ள அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பும், மகள் நதியா 9ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்நிலையில், பிரபுவும், அவரது மனைவியும் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டனர். அவர்களது மகன் நவீன்ராஜ் விளையாட சென்றுவிட்டார். வீட்டில் நதியா மட்டும் தனியாக இருந்துள்ளார்.

அப்போது அங்கு ஹெல்மெட் அணிந்தபடி இருசக்கர வாகனத்தில் வந்து இறங்கிய நபர், பிரபு வீட்டிற்கு சென்று அங்கிருந்த நதியாவிடம் சீட்டுப்பணம் கட்டுவதற்காக ரூ.35 ஆயிரத்தை வாங்கிக் கொள்ளும்படி உனது பெற்றோர் அனுப்பியதாக கூறியுள்ளார். இதை நம்பிய நதியா, வீட்டில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த பணம் இருக்கும் மஞ்சப்பையை அந்த நபரிடம் கொடுத்துள்ளார். அப்போது நதியாவிடம் அந்த நபர் நைசாக பேச்சு கொடுத்தபடி அவரது கவனத்தை திசை திருப்பி பீரோவில் இருந்த 9 பவுன் நகை மற்றும் அந்த மஞ்சப்பையில் இருந்த ரூ.50 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து அந்த நபர் தப்பியோடிவிட்டார். இதன் மொத்த மதிப்பு ரூ.3 லட்சத்து 50 ஆயிரமாகும். இதுகுறித்து பிரபு, கெடார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை கொள்ளையடித்த நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.