கன்னியாகுமரி தட்டான்விளை பெருமாள் நகரில் வசித்து வருபவர் பிரவீன். மர வியாபாரம் செய்து வரும் இவருக்கு ரூபா என்ற மனைவியும், 3 வயதில் மகளும், 1½ வயதில் மகனும் உள்ளனர். கடந்த சில மாதங்களாக பிரவீனுக்கு அவரது வியாபாரத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் நஷ்டத்தை ஈடுசெய்ய ரூ.20 லட்சம் கடன் வாங்கியுள்ளார். கடன் வாங்கி தனது தொழிலை விரிவு படுத்தியும் எந்த லாபமும் இல்லாமல் இருந்துள்ளது. இதனால் கடனை கட்ட முடியாமல் தவித்த பிரவீன் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடனை அடைக்க வழியே இல்லை என்ற நினைத்த பிரவீன் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
இதனால், தென்னைக்கு வைக்கும் பூச்சி மருந்தை பிரவீன் தன் மனைவி ரூபாவுக்கு கொடுத்து குடிக்க சொல்லி விட்டு தானும் குடித்துள்ளார். சிறிது நேரத்தில் மயங்கிய ரூபா உயிரிழந்துவிட்டதாக நினைத்து பிரவீன் கதறி அழுதுள்ளார். மேலும் பதற்றத்தில் நடந்ததை எல்லாம் அப்பகுதியினரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி ரூபா நேற்று உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரவீனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று பிரவீனும் பரிதாபமாக உயிரிழந்தார். கடன் பிரச்சினையால் கணவன், மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தாயும், தந்தையும் இல்லாமல் இரு பிஞ்சு குழந்தைகளும் கதறி அழுத சம்பவம் கல்நெஞ்சையும் கரைய செய்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக நேசமணிநகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.