நாடாளுமன்றமோ அல்லது சட்டமன்றமோ எதுவாக இருந்தாலும் ஆளும் கட்சியினர் பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதிப்பதற்காக ஒரு ஆண்டில் பலமுறை கூட்டத்தொடரை நடத்துகிறார்கள்.ஆனால் எதிர்க்கட்சிகளோ ஆளும் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, அவையை முடக்க திட்டமிட்டு, பல்வேறு கேள்விகளை எழுப்பி, கூச்சல் குழப்பங்களை உண்டாக்கி அவை ஒத்தி வைக்க செய்து விடுகிறார்கள்.
இதனால் பொதுமக்களுக்கு பயன்படும் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படாமலே ஆண்டு கணக்கில் இருந்து வருகிறது. இதனை ஒருபோதும் எதிர்க்கட்சியினர் கருத்தில் கொள்வதில்லை. எதிர்க்கட்சிகளுக்கு தேவை ஆளும் கட்சியை எப்படியாவது முடக்கி வைக்க வேண்டும் என்பது மட்டுமாகத்தான் இருக்கிறது.
அந்த வகையில், நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடர் ஆரம்பித்தது முதலே இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்து அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த வகையில், இன்று காலை நாடாளுமன்றம் கூடியவுடன் இரண்டு அவைகளிலும் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்து, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையான அமலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, மக்களவை பிற்பகல் 2 மணி வரையிலும், மாநிலங்களவை பகல் 12 மணி வரையிலும் ஒத்தி வைக்கப்படுவதாக அவை தலைவர்கள் அறிவித்தனர்.
மாநிலங்களவையில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதம் செய்ய பட்டியலிட பட்டிருக்கின்ற நிலையில், அதனை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்க மறுத்து, பிரதமர் நரேந்திர மோடி தான் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் மேலும் அதுபற்றி விளக்க அளிக்க வேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறார்கள்.